Trending News

அல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் வேண்டுகோள்

(UTV|COLOMBO)- புனித அல்-குர்ஆனை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி)பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றில் நேற்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ;

“மத குரு ஒருவர் புனித அல்-குர் ஆனை இந்த உயர் சபையில் விமர்சித்திருக்கின்றார். எமது வேதநூலான புனித குர்-ஆன் பெருமானார் (ஸல்) அவர்கள் எழுதியது அல்ல. அவருடைய கற்பனையில் வந்ததும் அல்ல. இறைவன் ஜிப்ரீல் அலை(ஸல்) அவர்கள் மூலமாக அல்-குர் ஆனை இறக்கினான். அதுவும் கட்டம் கட்டமாகவே அது இறக்கப்பட்டது. 6666 ஆயத்துக்கள் (வசனங்கள்) அதில் இருக்கின்றன. இந்த ஆயத்துக்கள் அனைத்தும் நல்லதையே வலியுறுத்துகின்றன. மனிதர்களை எவ்வாறு மதிப்பது, மற்ற மதத்தவர்களை எவ்வாறு நேசிப்பது, கெளரவிப்பது, அடுத்தவர்களுக்கு எவ்வாறு உதவுவது, அடுத்தவர்களின் உயிரை எவ்வாறு பாதுகாப்பது உட்பட அனைத்து விடயங்களும் காருண்யத்தின் அடிப்படையிலும் அன்பின் அடிப்படையிலும் குர்-ஆனின் கூறப்பட்ட்டிருக்கின்றது. ”

இஸ்லாலத்தில் யுத்த காலம் நடந்த போது, அந்தக் காலகட்டத்தில் யுத்தம் தொடர்பான 30 ஆயத்துக்கள் இறக்கப்பட்டன. பெருமானார் (ஸல்) அவர்களும், சஹாபாக்களும் முஸ்லிம்களும் யுத்த காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனையே அந்த ஆயத்துக்கள் தெளிவுபடுத்துதின. அதனை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் வெவ்வேறு வியாக்கியானங்களை குர்-ஆனுக்கு இப்போது வழங்கி இருக்கின்றனர்.

பர்மாவில் இனவாதத்தை கக்கிய அசின் விராது தேரர் இலங்கைக்கு வந்தபோது, இந்த 30 ஆயத்துக்களுக்கும் பிழையான விளக்கத்தையும் அர்த்தத்தையும் கொடுத்தார். ஆனால், இந்த 30 ஆயத்துக்களுக்கும் உண்மையான தெளிவையும் விளக்கத்தையும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வழங்கி இருக்கின்றது. இணையத்தளங்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான எத்தனையோ கட்டுரைகள் பதிவேற்றப்படுகின்றது. அத்துடன் இணையத்தளங்களிலும் இந்த ஆயத்துக்கள் தொடர்பான தவறான கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனை படித்துவிட்டு பாராளுமன்றத்திலும் பொது இடங்களில் குர்-ஆன் தொடர்பான மோசமான பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற கையோடு இந்த 2 மாத காலத்திற்குள், உலகத்திலேயே 1.9 பில்லியன் முஸ்லிம் மக்கள் பின்பற்றுகின்ற குர்-ஆனை வைத்து மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். எனவே இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துமாறு வேண்டுகின்றேன்.

சமூதாயத்தை வழிநடத்துகின்ற ஒரிரு சமயத்தலைவர்களும் இவ்வாறு நடந்துகொள்வதுதான் மனதை உறுத்துகின்றது. எமக்கு வேதனை தருகின்றது. சக வாழ்வை போதிக்க வேண்டிய, சமூதாயத்தை வழிநடத்த வேண்டிய சில மதகுருமார் அதற்கு மாறாக நடந்து கொள்கின்றனர். அவர்களின் பேச்சுக்களும் எங்களை வேதனைப்படுத்துகின்றது.

தன்னுடைய மத நூலை பிறர் குற்றஞ்சாட்டும் போது எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெளத்தர்களின் அடிப்படை நூலான திரிபீடகம் விமர்சிக்கப்படுவதை பெளத்தர்கள் ஒருபோதுமே சகித்துக்கொள்ள மாட்டார்கள். கிறிஸ்தவர்களின் சமய நூலான பைபிளை விமர்சிக்கப்படுவதை அவர்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் அடிப்படை நூலான வேதங்கள் விமர்சிக்கப்படுவதை அந்த சமயத்தவர்கள் பொறுக்க மாட்டார்கள். அதே போன்றுதான் முஸ்லிம்களும் சகித்துக்கொள்ள மாட்டர்கள் என்பதை இந்த உயர் சபையிலே நான் கூற விரும்புகின்றேன். மாவனெல்லையில் புத்தர் சிலைகளை உடைக்கும் போது, அந்த பாதக செயலை செய்தவர்களை இனங்காட்டிக் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே! அதுவும் அமைச்சர் கபீரின் இணைப்புச் செயலாளரே அவர்களை இனங்காட்டிக்கொடுத்தார். அது மாத்திரமின்றி நான் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இந்த செயலை செய்தவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். எந்த மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சிப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இஸ்லாமிய பெயர்களை சூட்டிக்கொண்டு இவ்வாறான செயலை செய்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர் .! அதனாலேயே தான் தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களை கூட முஸ்லிம் அடக்கஸ்தங்களில் அடக்க அனுமதி வழங்கப்படவில்லை.

யுத்த கால்த்தில் இறக்கப்பட்ட இந்த 30 ஆயத்துக்களினதும் சரியான பொருள் விளக்கத்தை எமது ஜம்மியதுல் உலமா சிங்கள மொழியில் வழங்கியுள்ளது. எனவே அந்த விளக்க நூலை நான் ஹன்சாட்டில் இணைக்குமாறு வேண்டுகின்றேன். பாராளுமன்றத்தில் உள்ள 225 எம்.பிக்களும் இதனை படித்து பார்க்குமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.

ஊடகப்பிரிவு-

Related posts

Private bus strike on Minuwangoda-Colombo route

Mohamed Dilsad

Karu Jayasuriya denies seeking to be nominated as candidate

Mohamed Dilsad

Five Member Delimitation Review Committee Appointed by the Speaker

Mohamed Dilsad

Leave a Comment