(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்) சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை வாழைச்சேனையில் இருந்து வாகரை பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சென்ற வேனும் நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்துச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் மோதுண்ட எஸ்.எச்.வீதி மீராகேணி ஏறாவூரைச் சேர்ந்த அலியார் முஸாதீகீன் என்ற மீன் வியாபாரி (வயது 48) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.