Trending News

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO)-தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஜனாதிபதி தலைமையில் இன்று வடக்கில் ஆரம்பமாகவுள்ளது.

முழு நாட்டுக்கும் சவாலாக உள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமையவே பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் இன்று முதல் 28ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பாடசாலை மாணவர்கள் தமது காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழியை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், இன்று போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய மாணவர்களை தெளிவுபடுத்தும் வகுப்பறை செயலமர்வுகளும், நாளைய தினம் பெற்றோர்களை இணைத்து மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பான சட்ட வரையறைகள் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரசியல்வாதிகளையும், ஊடகவியலாளர்களையும், தனியார் தொண்டு நிறுவனங்களையும் தெளிவுபடுத்தவுள்ளதுடன், சமயஸ்தாபனங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளை புனரமைப்பதற்கான அடிப்படை செலவுக்கான நிதி வழங்கும் நிகழ்வும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியை வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளன.

 

 

 

 

Related posts

Oil prices rise on expectation of extended crude supply cut

Mohamed Dilsad

போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்

Mohamed Dilsad

උතුරු මුහුදේ ඉන්දීය ධීවරයින් පිරිසක් අත්අඩංගුවට ගැනීමේ සිද්ධිය ගැන ඉන්දියාව, ශ්‍රී ලංකා රජයට අප්‍රසාදය පළ කරයි.

Editor O

Leave a Comment