(UTVNEWS | COLOMBO) – இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
50ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே விருது” வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சர்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறுகையில், “சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கும் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டோம். அவரும் அந்த விருதை வாங்க சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட பொன்விழாவில் எனக்கு கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.