(UTV|COLOMBO) – மோசடியில் ஈடுபட்டு வரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க உதவ முடியும் என அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ஜனாதிபதிக்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப செயற்படுவதே ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதியான கொள்கையாகும். நடைமுறைகளுக்கு புறம்பாக பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்களை பயன்படுத்திக்கொள்ள எவருக்கும் முடியாது.
எனவே இத்தகைய மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாமென ஜனாதிபதி அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. ஜனாதிபதி அவர்களின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போருக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.