Trending News

வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்த தீர்மானம்

(UTV|COLOMBO) – 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே குறித்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு கரப்பந்தாட்டப் போட்டிகளுக்காக கியூபா நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். எனினும், இலங்கை அணியால் வெண்கலப் பதக்கத்தினை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடிந்தது.

இதன்படி, கியூபா நாட்டைச் சேர்ந்த குறித்த பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அடுத்த வருடத்திலிருந்து சுமார் 20 தேசிய மட்ட பயிற்சியாளர்களை நியமித்து அவர்களுக்கு அனுபவமிக்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 100 தங்கப் பதக்கங்களை வென்றெடுக்கும் நோக்கில் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு விளையாட்டுக்காகவும் விசேட பயிற்சிக் குழாங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக திறைசேரியிடமிருந்து 50 மில்லியன் ரூபா பணத்தை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

Mohamed Dilsad

புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Mohamed Dilsad

கைதான 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Mohamed Dilsad

Leave a Comment