(UDHAYAM, COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது.இதனை குறைபாடுகளின்றி அரசு நிறைவேற்றிவரும் நிலையில் முறையற்ற நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கமுடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் நேற்று நடைபெற்ற 75வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
[accordion][acc title=”ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,”][/acc][/accordion]
ஒழுக்கப் பண்புகளுடன்கூடிய அநேக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறுபிரிவினரால் அசாதாரணமான முறையில் செயற்படுத்தப்படும் பகிடிவதையைத் தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கல்விமான்கள் மற்றும் மேதைகளை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை பாதிக்கும் இவ்வாறான செயல்கள் இலவசக்கல்விக்கு செய்யப்படும் அவமதிப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி, எமது நாட்டின் 40-50 வருடகால பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதை தொடர்பாக கரும்புள்ளிகள் காணப்படுவதோடு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்களது பெற்றோரின் நிம்மதியை துயரக்கண்ணீராக மாற்றும்வகையில் மாணவர்கள் செயற்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.
இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் கொழும்பை அண்டிய பல பாடசாலைகள் பிரித்தானிய இராணுவ முகாம்களாக மாறிய சந்தர்ப்பத்தில் கோட்டை ஆனந்த தேசிய கல்லூரியின் கிளையாக 1942 பெப்ரவரி 23ம் திகதி மத்துகம ஸ்ரீசுதர்சனாராம விகாரையில் மத்துகம ஆனந்த தேசியக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்கள் பலரை உருவாக்கிய பெருமைமிகு வரலாற்றிற்கு உரிமைகோரும் மத்துகம ஆனந்த தேசிய பாடசாலையின் செயற்பாடுகளை ஜனாதிபதி பாராட்டினார்.
கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்துகம ஆனந்த தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் நிதி மற்றும் நீதி பிரதி அமைச்சருமான தயா டி பெஸ்குவெல்; சிலையையும், நினைவுப்பலகையையும் ஜனாதிபதி திரைநீக்கம் செய்துவைத்தார்.
கல்லூரியின் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடமும் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவன் ஒருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும், நிகழ்வின் நினைவுப் பரிசும் ஜனாதிபதிக்கு பரிசளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பாடசாலையின் அதிபர் ரந்துன் ஜயலத், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/02/20l.jpg”]